
மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் அண்மையில் எடுக்கப்பட்ட படம். கருமைநிறமாக இருக்கவேண்டிய மேகம் வெண்மையாகவும் மிகமிக குறைவாகவும் காணப்படுகிறது. புதுடில்லி, செப். 7-புவியின் வெப்பம் அதிகரிப்பதால் அடுத்த 150 ஆண்டுகளில் இந்தியாவில் இல்லாமல் போய்விடும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. விவசாயத் துறையின் ஆதாரமான பருவமழை பொய்க்கும் பட்சத்தில் கடுமையான விளைவுகள் ஏற்படப் போகிறது என்று இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட இந்தியப் பருவ நிலை குறித்த ஆய்வு மையம் கூறுகிறது. புவியின் வெப்பம் அதிகரிப்பதால் அரபிக்கடலின் வெப்பமும் அதிகரிக்கிறது. இதுதான் கடுமையான பிரச்சனை. இது கரையிலும் கடலிலும் நிலவும் வெப்ப வேறுபாட்டைக் குறைக்கிறது. இந்த வெப்ப வேறு பாடுதான் மழைக்குக் காரணமான காற்றை கடலிருந்து கரைக்கு ஈர்க்கிறது. வெப்ப நிலையில் உள்ள வேறுபாடு குறைவது, பருவ மழைக்காற்று வீசாமல் செய்துவிடும். கடந்த 30 ஆண்டு கால பருவமழையைப் பரிசீலித்தோமானால் கரைக்கும் கடலுக்கும் இடையேயான வெப்பநிலை வேறுபாடு குறைவது தெரியும். இன்னும் 150 ஆண்டுகளில் இந்த வேறுபாடு பூஜ்யம் ஆகி விடும் என்று ஆய்வுக்குத் தலைமை தாங்கிய விஞ்ஞானி எஸ்.எம்.பாவிஸ்கர் கூறினார். வேறுபாடு பூஜ்யமானால் பருவமழைக் காற்றுக்குப் பதில் வறண்ட காற்றுதான் வீசும். இது தென்மேற்குப் பருவமழையைக் கடுமையாகப் பாதிக்கும். அரபிக் கடலின் மேற் பரப்பின் வெப்பநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1948 - 77 காலத்தில் இது 18.77 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனால், 1979 - 2008ல் வெப்பம் 19.64 ஆக உயர்ந்ததாக எர்த் சிஸ்டம் சயின்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள மழைக் குறைவு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்திற்கான எடுத்துக்காட்டாகும். இந்த ஆண்டு நாட்டில் 23 சதவீதம் அளவுக்கு மழை குறைந்துவிட்டது என்றும் ஆய்வு கூறுகிறது.நன்றி : தீக்கதிர் 08-09-09